சென்னிமலை முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
சென்னிமலை முருகன் கோயில் பங்குனி உத்திரத் தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் மார்ச் 19 ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடர்ந்து, சென்னிமலை கைலாசநாதர் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு வள்ளி-தெய்வானை சமேத முத்துக் குமாரசாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மலர் அலங்காரத்தில் சுவாமிகள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர், கைலாசநாதர் கோயிலில் இருந்து சுவாமிகளை தேருக்கு காலை 6.15 மணிக்கு மேல் கொண்டு வந்தனர். அதைத்தொடர்ந்து, காலை 6.30 மணிக்கு தேர் வடம் பிடிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு "அரோகரா' கோஷங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தெற்கு ராஜ வீதி, மேற்கு ராஜ வீதி வழியாக தேரை இழுத்து, காலை 7 மணிக்கு வடக்கு ராஜ வீதி சந்திப்பில் நிறுத்தினர்.
விழாவையொட்டி, அக்னி நட்சத்திர அன்னதான வழிபாட்டு மன்றம் சார்பில், தேவஸ்தான திருமண மண்டபத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மாலை 5 மணிக்கு மீண்டும் தேர் வடம் பிடிக்கப்பட்டு நிலை சேர்க்கப்பட்டது.
பரிவேட்டை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (மார்ச் 22) காலையும் , தெப்பத்தேர் நிகழ்ச்சி இரவும் நடைபெறுகிறது. மகா தரிசனம், மஞ்சள் நீர் உற்சவம் ஆகிய நிகழ்ச்சிகளுடன் சனிக்கிழமை (மார்ச் 23) விழா நிறைவடைகிறது.