மக்களவைத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் போட்டியிட மனுதாக்கல் தொடங்கிய 3 ஆவது நாளான புதன்கிழமையும் வேட்பு மனு தாக்கல் செய்ய யாரும் வரவில்லை.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 19ஆம் தேதி தொடங்கி 26ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஈரோடு தொகுதியில் போட்டியிடுவோர் தங்கள் வேட்பு மனுக்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தாக்கல் செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் புதன்கிழமை வரையிலான கடந்த 3 நாள்களில் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. 3 நாள்களில் 29 வேட்பு மனு படிவங்களை பல்வேறு கட்சியினர் வாங்கிச் சென்றுள்ளனர். இந்நிலையில் அதிமுக வேட்பாளர் வெங்கு மணிமாறன் தனது வேட்பு மனுவை, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யவுள்ளதாக அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.