பெருந்துறை அருகே ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்ப கொண்டுச் சென்ற ரூ. 45 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
பெருந்துறையை அடுத்த காஞ்சிக்கோவில், கொண்டையன்காட்டுவலசு அருகில் பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் மோகனசுந்தரம் (வேளாண்மை உதவி இயக்குநர்), காவல் உதவி ஆய்வாளர் ஜீவானந்தம் ஆகியோர் வாகனச் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த, ஏ.டி.எம்.இயந்திரத்தில் பணம் நிரப்பும் வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்த ரூ. 45 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
இந்த வாகனம் பெருந்துறை, காஞ்சிக்கோவில் மற்றும் சென்னிமலை பகுதிகளில் உள்ள ஸ்டேட் பேங்க் ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்புவதற்காக கொண்டு வந்த ரூ. 45 லட்சத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர், வங்கி அதிகாரிகள் உரிய ஆவணங்களை காட்டி பணத்தை திரும்பப் பெற்றுச் சென்றனர்.