உதகை அருகே மசினகுடி கிராமத்தில் பழங்குடியின மக்களுக்கு முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயனாளிகள் சேர்ப்பு முகாம் நடைபெற்றது.
நீலகிரி மாவட்டத்தில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் இதுவரை 1,63,969 குடும்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் இதுவரை காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்யப்படாமல் விடுபட்டுள்ள பழங்குடியினருக்கான சிறப்பு முகாம், உதகை வட்டம், வாழைத்தோட்டம் பகுதியில் நடத்தப்பட்டது.
மேலும் விடுபட்ட பயனாளிகளுக்கு மசினகுடி லேம்ப் சொஸைட்டியில் முகாம் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இச் சிறப்பு முகாமில் முன்பதிவு செய்த பயனாளிகளுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டைகள் வழங்கப்பட்டன.
உதகை கோட்டாட்சியர் சுரேஷ், உதகை வட்டாட்சியர் தினேஷ் குமார், சோலூர் உள்வட்ட வருவாய் ஆய்வாளர் நந்தகோபால், மசினகுடி கிராம நிர்வாக அலுவலர் ராதிகா, வனத்துறை துணை திட்டத் தலைவர் தட்சணாமூர்த்தி, நீலகிரி மாவட்ட காப்பீட்டுத் திட்ட அலுவலர் ரகுபதி ஆகியோர் இந் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.