நீலகிரி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பிலான புறக்கடை கோழி வளர்ப்புத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளதாவது:
நீலகிரி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் புறக்கடை கோழி வளர்ப்புத் திட்டத்தில் 2018-19 நிதியாண்டுக்கான பயனாளிகள் புதிய விதிமுறைகளின்படி தேர்வு செய்யப்படவுள்ளனர்.
இத் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு ஒரு அலகு அல்லது 50 அசீல் இன கோழிகள் வழங்கப்படும். ஓர் ஊராட்சி ஒன்றியத்துக்கு தலா 200 அலகுகள் வீதம் வழங்கப்பட உள்ளன. இத்திட்டம் மாவட்ட ஊரக வாழ்வாதர மையம் மூலமாக பெண் பயனாளிகளைக் கொண்டு செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தின் பயனாளிகள் பெண்களாக இருப்பதோடு, தொடர்புடைய கிராமங்களில் தொடர்ந்து வசிப்பவராகவும் இருக்க வேண்டும். அத்துடன், இத்துறை மூலம் செயல்படுத்தப்படும் விலையில்லா செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள், கோழி வளர்ப்புத் திட்டங்களில் பயனடையாதவராகவும் இருத்தல் வேண்டும். விதவைகள், ஆதரவற்ற அனாதைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினரில் 30 சதவீத பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதுதொடர்பாக அருகிலுள்ள கால்நடை மருத்துவமனைகள், மருந்தகங்களில் நவம்பர் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.