கோத்தகிரி பேருந்து நிலையப் பகுதியில் சுற்றித்திரியும் காட்டுப் பன்றிகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோத்தகிரி பேருந்து நிலையத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.
கடந்த ஒரு வார காலமாக பேரூராட்சி அலுவலகத்துக்கு அருகில் உள்ள அடர்ந்த புதர் பகுதிகளிலிருந்து காட்டுப் பன்றிகள் திடீரென பேருந்து நிலையத்துக்குள் புகுந்து விடுகின்றன. அவ்வப்போது கூட்டமாக வரும் காட்டுப் பன்றிகளைப் பார்த்து பயணிகள் அச்சமடைகின்றனர்.
பேரூராட்சி அலுவலகம் அருகில் உள்ள அடர்ந்த புதர்களில் காட்டுப் பன்றிகள் வசித்து வருகின்றன. எனவே, இங்குள்ள புதர்களை அப்புறப்படுத்தவும், பேருந்து நிலையத்துக்குள் வரும் காட்டுப் பன்றிகளைப் பிடிக்கவும் வனத் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.