உதகையில் மக்கள் குறைதீர் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் 194 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தில் குடும்ப அட்டை, வீட்டு மனைப் பட்டா, தொழில் மற்றும் கல்விக் கடன் உதவி, முதியோர் உதவித்தொகை, சாலை, குடிநீர், கழிப்பிடம் மற்றும் மின்சார வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மனு அளித்தனர். மொத்தம் 194 மனுக்கள் பெறப்பட்டன.
பொதுமக்கள் அளித்த மனுக்களின் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பரிசீலனை செய்து தகுதி இருப்பின் உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஆட்சியர் உத்தரவிட்டார். அத்துடன் கடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தீர்வு காணாமல் நிலுவையிலுள்ள மனுக்களின் மீதும் விரைவான நடவடிக்கை எடுக்குமாறு துறை ரீதியான அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்தக் கூட்டத்தில், மந்தாடா பகுதியில் நிகழ்ந்த அரசுப் பேருந்து விபத்தில் உயிரிழந்த பெங்களுரூவைச் சேர்ந்த ஜெயஸ்ரீ என்பவரின் குடும்பத்தினருக்கு முதல்வர் விபத்து நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சத்துக்கான காசோலையினையும், மண் சரிவு ஏற்பட்டு உயிரிழந்த பிங்கர்போஸ்ட் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த சிராஜூதீன் குடும்பத்தாருக்கு ரூ. 50 ஆயிரத்துக்கான காசோலையினையும், பைக்காரா அருவியில் மூழ்கி உயிரிழந்த குன்னூர் அறையட்டி பகுதியைச் சேர்ந்த ஷோபனா மகள்கள் சந்தியா, மதுமிதா ஆகியோருக்கு மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து கல்வி உதவித் தொகையாக தலா ரூ. 20,000 வீதம் ரூ.40,000-க்கான காசோலையினையும் ஆட்சியர் வழங்கினார். முன்னதாக தேசிய ஊட்டச்சத்து மாதத்தினை முன்னிட்டு ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசிய ஊட்டசத்து உறுதி மொழியினை அரசு அலுவலர்கள் ஏற்றுக் கொண்டனர்.
இக்கூட்டத்தில், சமூக பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியர் முருகன், அரசுத் துறை அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.