கூடலூர் அருகே போஸ்பாறா பகுதியில் திங்கள்கிழமை இரவு யானை தாக்கியதில் விவசாயி உடல் நசுங்கி உயிரிழந்தார்.
நீலகிரி மாவட்டம், கூடலூர் வருவாய் வட்டத்தில் உள்ள முதுமலை ஊராட்சி நாகம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி வாசு (50). இவர் திங்கள்கிழமை இரவு 10 மணி அளவில் கூடலூரில் இருந்து அவரது கிராமத்துக்கு வனப் பகுதி வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
முதுமலை புலிகள் சரணாலயத்திற்கு உள்பட்ட போஸ்பாறா பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது யானை அவரை வழிமறித்து தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
நள்ளிரவு வரை வீட்டுக்கு வராத காரணத்தால் வாசுவின் உறவினர்கள் அவரைத் தேடத் தொடங்கினர். அப்போது, போஸ்பாறா பகுதியில் யானைத் தாக்கி வாசு இறந்துகிடப்பதைப் பார்த்த உறவினர்கள் வனத் துறையினர் மற்றும் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் அவரது சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச் சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.