மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால்தான் இளைஞர்களுக்கு எதிர்காலம் உருவாகும் என மைசூரு மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினரும், நீலகிரி மக்களவைத் தொகுதிக்கான மேலிடப் பொறுப்பாளருமான கிருஷ்ணமூர்த்தி பேசினார்.
வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நீலகிரி மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மையினர் பிரிவின் சார்பில் வீடுதோறும் சென்று வாக்கு சேகரிக்கும் இயக்கம் வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. இதை மைசூரு மக்களவைத் தொகுதி உறுப்பினரும், நீலகிரி மக்களவைத் தொகுதிக்கான காங்கிரஸ் மேலிட பொறுப்பாளருமான கிருஷ்ணமூர்த்தி தொடங்கிவைத்துப் பேசியதாவது:
மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சியும், தமிழகத்தில் அதிமுக தலைமையிலான ஆட்சியும் ஏற்பட்ட பின்னர் மக்களுக்கான சுமைகளும் அதிகரித்துவிட்டன. பண மதிப்பிழப்பு நடவடிக்கையிலும், ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்டதாலும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பாஜக ஆட்சியில் ஒரு சில முதலாளிகள் மட்டுமே உயர்ந்துள்ளனர். ஆனால், படித்த கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. எனவே, மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால்தான் இளைஞர்களுக்கு சிறப்பான எதிர்காலம் உருவாகும். காங்கிரஸ் கட்சிக்கு பலமான அடித்தளத்தை இளைஞர்கள்தான் உருவாக்க வேண்டும் என்றார்.
நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும், உதகை சட்டப் பேரவை உறுப்பினருமான ஆர்.கணேஷ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள், ஜே.பி.சுப்பிரமணியம், நாகராஜ், உதகை ரவிக்குமார், அழகேசன், பி.கே.ஜி.கெம்பையா, ஜாகிர், சி.எம்.பி. ராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்துக்குப் பிறகு உதகை சுதந்திர சதுக்கத்தில், காஷ்மீரில் பயங்கரவாதி தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.