விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்கும் மத்திய அரசுத் திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக ரூ. 2 ஆயிரம் பெறுவதற்கான விண்ணப்பங்களை அளிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:
நீலகிரி மாவட்டத்தில் 5 ஏக்கர் மற்றும் அதற்கு குறைவான நிலம் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்கும் திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக ரூ. 2,000 வழங்கப்படும். இதற்காக , கிராமங்கள் வாரியாக தகுதியுடைய விவசாயிகளின் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காகப் பெயர் பதிவு செய்வதற்கு பிப்ரவரி 20ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், விடுபட்ட விவசாயிகளுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கும் வகையில் இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பெயர் பதிவு செய்துள்ள விவசாயிகளின் பெயர் பட்டியல் கிராம நிர்வாக அலுவலகங்களில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதில், தகுதியான விவசாயிகளின் பெயர் விடுபட்டிருப்பின், அவர்கள் கிராம நிர்வாக அலுவலகங்களுக்குச் சென்று தங்கள் பெயரைப் பதிவு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.