முதுமலை வனச் சரகப் பகுதியில் வேட்டைத் தடுப்புக் காவலர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கூலித் தொழிலாளிக்கு 8 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வித்து நீலகிரி மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நீலகிரி மாவட்டம், முதுமலை வனச் சரகத்துக்கு உள்பட்ட சிங்காரா பகுதியில் சிங்காரத் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (30), கூலித் தொழிலாளி. இவர், 2016 பிப்ரவரி 7ஆம் தேதி வனப் பகுதிக்குள் உலவிக் கொண்டிருந்த ரிவால்டோ என்ற வளர்ப்பு யானைக்கு மரக் கிளைகளை முறித்து உணவாக வழங்கிக் கொண்டிருந்தாராம். அப்போது, அங்கு வந்த வேட்டைத் தடுப்புக் காவலர் கண்ணன் (50), இச்செயலைக் கண்டித்துள்ளார்.
இதனால், அவர்கள் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, கிருஷ்ணன் தாக்கியதில் கண்ணன் கீழே விழுந்து படுகாயமடைந்து, உயிரிழந்தார். அருகிலிருந்த வாய்க்காலில் கண்ணனின் சடலத்தை வீசிவிட்டு கிருஷ்ணன் தப்பிவிட்டார்.
இது தொடர்பாக மசினகுடி காவல் நிலையத்தில் கண்ணனின் மனைவி மாதவி கொடுத்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இவ்வழக்கில் உதகையிலுள்ள மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. மகளிர் நீதிமன்ற மாவட்ட நீதிபதி முரளிதரன் அளித்த இத்தீர்ப்பில் கிருஷ்ணனுக்கு 8 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இவ்வழக்கு இலவச சட்ட உதவி மையத்தின் மூலம் நடைபெற்று வந்ததால் அபராதம் ஏதும் விதிக்கப்படவில்லை. இவ்வழக்கில் அரசுத் தரப்பில் மாலினி பிரபாகரன் ஆஜரானார்.