மசினகுடியில் கரடி தாக்கியதில் வனத் துறை ஊழியர் படுகாயமடைந்தார்.
நீலகிரி வடக்கு வனக் கோட்டத்தில், மசினகுடி பகுதியில் வேட்டைத் தடுப்புக் காவலராகப் பணியாற்றி வருபவர் அண்ணாதுரை (30). இவர் வெள்ளிக்கிழமை காலை வழக்கம்போல ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கிருந்த புதரில் மறைந்திருந்த கரடி இவரை திடீரென தாக்கியதில் தலையில் பலத்த காயமடைந்துள்ளார்.
இவரது அலறல் சப்தம் கேட்டு, அருகிலிருந்த மற்ற வனத் துறை ஊழியர்கள் விரைந்து வந்து கரடியை விரட்டி அண்ணாதுரையை மீட்டு மசினகுடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல்சிகிச்சைக்காக அண்ணாதுரை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.