வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் தமிழக அரசு ரூ. 2,000 வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்தி:
தமிழக முதல்வர், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் அரசின் சிறப்பு நிதி உதவியாக தலா 2,000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். அதனடிப்படையில், நீலகிரி மாவட்டத்தில் நான்கு ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட 35 கிராம ஊராட்சிகளிலும், அனைத்து குக்கிராமங்களிலும் இதற்கான கணக்கெடுப்புப் பணியானது நிறைவு பெற்றுவிட்டது.
இந்நிலையில், எந்தவொரு தகுதியான பயனாளியும் விடுபட்டு விடக்கூடாது என்பதற்காக இக்கணக்கெடுப்பு பணியானது 24, 25 ஆம் தேதிகளில் நகர்ப்புறம், 35 கிராம ஊராட்சிகள், 1,282 குக்கிராமங்களில் வசிக்கும் ஏழைகள், மிகவும் ஏழைக் குடும்பங்களின் புள்ளி விவரங்களைச் சேகரிக்க 314 வாக்குச் சாவடி அமைவிடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.
சிறப்பு முகாம்களைத் தொடர்ந்து மார்ச் 1ஆம் தேதி வரை புள்ளி விவரங்களானது மாவட்ட அளவில் சேகரிக்கப்படும். அனைத்து விவரங்களும் மார்ச் 2ஆம் தேதி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
ஊரக, நகர்புறப் பகுதிகளில் வசிக்கும் தகுதி வாய்ந்த ஏழை மற்றும் மிகவும் ஏழைக் குடும்பத்தினர் உரிய விண்ணப்பப் படிவங்களை சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஊராட்சி அலுவலகம், நகராட்சி, பேரூராட்சி அலுவலகம், வாக்குச் சாவடி அமைவிடங்களில் பெற்றுக்கொள்ளலாம். தகுதியான நபர்கள் தங்களது பெயர், பிறந்த தேதி, முகவரி, குடும்ப அட்டை, அலைபேசி எண், வங்கி கணக்கு எண், ஆதார் எண் போன்ற விவரங்களை மேற்குறிப்பிட்ட இடங்களுக்குக் கொண்டு வந்து பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றார்.