அணைகளின் நீர்மட்டம் குறைவு: நீர் மின் உற்பத்தி பாதிப்பு
நீலகிரி மாவட்டத்தில் பருவ மழை குறைந்ததால் அணைகளின் நீர் மட்டமும் வெகுவாக குறையத்துவங்கியுள்ளது. இதனால் நீர் மின் நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் மேல்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, குந்தா, கெத்தை உள்ளிட்ட 12 அணைகள் உள்ளன. இந்த அணைகளில் தேக்கி வைக்கப்படும் நீரைக் கொண்டு அவலாஞ்சி, குந்தா, கெத்தை, பைக்காரா உள்ளிட்ட நீர் மின் நிலையங்களில் தினசரி 834 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
மின் உற்பத்தி செய்யப்பட்டு உபரியாக செல்லும் தண்ணீர் குந்தா, கெத்தை, பரளி மற்றும் பவானி வழியாக விவசாயம் உள்ளிட்ட பிற தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு அங்கு பெய்யும் பருவமழையே முக்கிய காரணமாகும். ஆனால் கடந்த ஆண்டு நீலகிரி மாவட்டத்தில் பருவமழை ஓரளவு தான் பெய்தது. இதனால் அணைகளில் நீர்மட்டம் உயர வில்லை.
மேல்பவானி அணையின் மொத்த நீர்மட்டம் 210 அடி. ஆனால் தற்போது இந்த அணையில் 130 அடி தான் தண்ணீர் உள்ளது. இதற்கு அணைக்கு போதிய அளவு நீர் வரத்து இல்லாததே காரணம் ஆகும்.
இதனால் அணையின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து வருகிறது. கோடை காலம் தொடங்க உள்ள நிலையில் மேல் பவானி அணையில் மின்உற்பத்தி மேலும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.