உதகையில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் நலிவடைந்தோருக்கு நிதி உதவி அளிக்கப்பட்டது.
உதகையில், நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், குடும்ப அட்டை, வீட்டுமனைப் பட்டா, தொழில் மற்றும் கல்விக் கடன் உதவி, முதியோர் உதவித் தொகை, சாலை, குடிநீர், கழிப்பிடம், மின்சார வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 171 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன.
இதில், ஆதரவற்ற மாற்றுத் திறனுடையோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் கோத்தகிரி, உதகை பகுதிகளைச் சேர்ந்த 4 மாற்றுத் திறனாளிகளுக்கு மாதந்தோறும் தலா ரூ. 1,000 உதவித் தொகை பெறுவதற்கான ஆணையையும், மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து நடுவட்டம், பைக்காரா நீர்வீழ்ச்சிப் பகுதியை சேர்ந்த ஈஸ்வரி என்பவருக்கு ரூ. 30,000க்கான காசோலையினையும், கூடலூர், தேவாலா ரேஞ்ச் கரியசோலை பகுதியைச் சேர்ந்த கை, கால் செயல் இழந்த பிரான்சிஸுக்கு ரூ. 30,000க்கான காசோலையினையும், பந்தலூர் வட்டம், உப்பட்டியைச் சேர்ந்த குழந்தைவேலுக்கு மருத்துவ செலவிற்காக ரூ.25,000க்கான காசோலையினையும் ஆட்சியர் வழங்கினார்.
சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் முருகன், மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியர் பாஸ்கரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலர் குழந்தைவேல், அரசுத் துறை அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.