கோயில் நிலத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி பால் பண்ணை கட்டுமானப் பணி: இந்து அறநிலையத் துறை உதவி ஆணையர் புகார்

ஊதியூர் அருகே கோயில் நிலத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி கட்டுமானப் பணிகள் நடைபெறுவதை வருவாய்த் துறையினர் தடுக்க முனையாததோடு,


ஊதியூர் அருகே கோயில் நிலத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி கட்டுமானப் பணிகள் நடைபெறுவதை வருவாய்த் துறையினர் தடுக்க முனையாததோடு, அதற்கு போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருப்பதாக இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் புகார் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம், காங்கயம் தாலுகா, ஊதியூர் அருகே குண்டடம் செல்லும் சாலையில் ஊதியூர் மலை அடிவாரத்தில் 95 ஏக்கர் பரப்பளவில் தனியார் பால் நிறுவனம் ஒன்று, பால் பண்ணை அமைப்பதற்காக கட்டுமானப் பணிகளை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கியது. கட்டுமானப் பணிகள் விரைந்து நடைபெற்று வந்த நிலையில், கட்டுமானப் பணிகள் நடைபெறும் நிலம் முழுவதும் ஊதியூரில் உள்ள புகழ்பெற்ற உத்தண்ட வேலாயுதசாமி கோயிலுக்குச் சொந்தமானது எனக் கூறி, இந்துசமய அறநிலையத் துறை சார்பில் புகார் கொடுக்கப்பட்டது. அத்துடன், கட்டுமானப் பணிகளைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, ஆட்சியர் உத்தரவின்பேரில், காங்கயம் வட்டாட்சியர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கட்டுமானப் பணிகளை நிறுத்த உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டன. அத்துடன் அந்த இடத்துக்கு சிவன்மலை கோயில் நிர்வாகம் சார்பில் காவலுக்குப் பணியாளர்களும் நியமிக்கப்பட்டனர். அத்துடன் சம்பந்தப்பட்ட பால் நிறுவனத்தின் காவலர்களும் இருந்து வந்தனர்.
இந்நிலையில், தனியார் பால் நிறுவனத்தின் கட்டுமானப் பணி நடைபெறும் இடத்தில் டிசம்பர் 10 ஆம் தேதி காலை திடீரென போலீஸார் குவிக்கப்பட்டதோடு, 100 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.
இதுகுறித்து, போலீஸ் தரப்பில் விசாரித்தபோது தாராபுரம் உதவி ஆட்சியரிடம் கட்டுமானப் பணிகளைத் தொடர சம்பந்தப்பட்ட பால் நிறுவனம் அனுமதி பெற்றிருப்பதாகத் தெரிவித்தனர். காங்கயம் வட்டாட்சியர் மகேஸ்வரனும் இதே கருத்தை தெரிவித்தார்.
இந்நிலையில், சிவன்மலை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் கண்ணதாசன், நீதிமன்ற உத்தரவை மீறி கோயில் நிலத்தில் காவல் துறை, வருவாய்த் துறை உதவியோடு கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதாக புகார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, உதவி ஆணையர் கண்ணதாசன் கூறியதாவது:
தற்போது பால் பண்ணை கட்டுமானப் பணிகள் நடைபெறும் நிலம் முழுவதும் ஊதியூர் உத்தண்ட வேலாயுதசாமி கோயிலுக்குச் சொந்தமானதாகும். இங்கு கட்டுமானப் பணிகள் நடப்பது குறித்த தகவல் கிடைத்தவுடன் நடவடிக்கை மேற்கொண்டு, கட்டுமானப் பணிகளைத் தடுத்து நிறுத்தினோம். அதன் பின்னர் அந்த நிலம் கோயிலுக்கு பாத்தியப்பட்ட நிலம் இல்லை என்று பிப்ரவரி 2 ஆம் தேதி தாராபுரம் உதவி ஆட்சியர் உத்தரவு பிறப்பித்திருந்தார். அந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. உயர் நீதிமன்றம் உதவி ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்த நிலையில், பால் நிறுவனத்தினர் மேல்முறையீடு செய்தனர். மேல் முறையீட்டு மனுவும் ஜூன் 20 ஆம் தேதி உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.
நிலைமை இவ்வாறு இருக்க, நீதிமன்ற உத்தரவை மீறி தனியார் நிறுவனத்தினர் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக மேல் நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்து வருகிறோம் என்றார்.
இதுதொடர்பாக, உத்தண்ட வேலாயுதசாமி கோயில் பக்தர்கள் கூறியதாவது:
ஊதியூரைச் சுற்றிலும் உத்தண்ட வேலாயுதசாமி கோயிலுக்குச் சொந்தமாக பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலங்களை விவசாயிகள் குத்தகைக்கு எடுத்து அனுபவித்து வருகின்றனர். இதில், சிலர் போலியாக பட்டா தயார் செய்து விற்பனை செய்துள்ளனர். அவ்வாறு விற்பனை செய்யப்பட்ட நிலங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாரபட்சமின்றி நடவடிக்கை மேற்கொண்டு, மீட்க வேண்டும் என்றனர்.
இப்பிரச்னை தொடர்பாக இந்து முன்னணியின் திருப்பூர் கிழக்கு மாவட்டத் தலைவர் தமிழ்செல்வன் கூறியதாவது:
உத்தண்ட வேலாயுதசாமி கோயில் நிலத்தில் சட்டவிரோதமாக கட்டுமானப் பணிகள் நடைபெறுவதாக அறிந்தோம். இதுதொடர்பாக மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து வருகிறோம். கட்டுமானப் பணிகளை நிறுத்தக் கோரியும், கோயில் நிலத்திலிருந்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தை வெளியேற்றவும் வலியுறுத்தி மிகப் பெரிய போராட்டத்தை இந்து முன்னணி சார்பில் விரைவில் நடத்த உள்ளோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com