காங்கயத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஏ.சி.கோவிந்தசாமி நினைவு அறக்கட்டளை சார்பில், காங்கயம், திருப்பூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமை காங்கயம் நகராட்சியின் முன்னாள் தலைவர் ஜி.மணிமாறன் துவக்கி வைத்தார்.
இதில், ஏ.சி.கோவிந்தசாமி நினைவு அறக்கட்டளையுடன் திருப்பூர் மாவட்ட பார்வை இழப்பு சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியோர் இணைந்து நோயாளிகளுக்கு பரிசோதனை மேற்கொண்டனர்.
இந்த முகாமில், கண் புரை, கண் நீர் அழுத்தம், மாலைக் கண் நோய், மாறுகண் பிரச்னை, தூரப்பார்வை, கிட்டப்பார்வை உள்ளிட்டவற்றுக்கு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. கண்புரை முற்றியோருக்கு அறுவை சிகிச்சை செய்யவும் பரிந்துரைக்கப்பட்டது. மேலும், கிட்டப் பார்வை, தூரப் பார்வை உள்ளவர்களுக்கு குறைந்த விலையில் கண்ணாடிகளும் வழங்கப்பட்டன.
இதில், காங்கயம் நகராட்சியின் முன்னாள் துணைத் தலைவர் சி.கந்தசாமி, ஒன்றிய அதிமுக இளைஞர் அணி செயலாளர் கே.கே.பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.