நூலக வார விழா: திறனறி போட்டிகளுக்கு அழைப்பு
உடுமலையில் நடைபெற உள்ள 51ஆவது தேசிய நூலக வார விழா போட்டிகளில் பங்கேற்க மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உடுமலை உழவர் சந்தை எதிரில் உள்ள கிளை நூலகம் எண்-2 இல் நவம்பர் 14 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை 51 ஆவது தேசிய நூலக வார விழா கொண்டாடப்பட உள்ளது.
இதையொட்டி, தினமும் கருத்தரங்கம், புதிய நூல்கள் கண்காட்சி, திறனறிப் போட்டிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடை பெற உள்ளன. பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளன. 6, 7, 8 ஆகிய வகுப்புகளுக்கு "நான் விரும்பும் சுதந்திரப் போராட்ட வீரர்' என்கிற தலைப்பில் கட்டுரைப் போட்டியும், "நூலகம் செல்வோம்' என்ற தலைப்பில் கவிதைப் போட்டி யும், 9, 10ஆம் வகுப்புகளுக்கு நூலகமும், நானும் என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியும், நான் விரும்பும் கவிஞர் என்ற தலைப்பில் கவிதைப் போட்டியும், 11,12ஆம் வகுப்புகளுக்கு என்னை மாற்றிய நூலகம் என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியும், நூலக தந்தை எஸ். ஆர்.ரெங்கநாதன் என்ற தலைப்பில் கவிதைப் போட்டியும் நடைபெற உள்ளது. நவம்பர் 18 ஆம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி அளவில் இந்தப் போட்டி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விருப்பம் உள்ள மாணவ, மாணவிகள் கிளை நூலகம் எண்-2இல் தொடர்பு கொள்ளலாம். இதில் சிறப்பிடம் பெறுபவர்களுக்கு நவம்பர் 21ஆம் தேதி கிளை நூலகத்தில் நடைபெறும் விழாவில் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.