தமிழ்நாடு மின் வாரிய ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் மின் வாரிய ஒப்பந்த ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடுமலை மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு திட்டச் செயலாளர் எம்.கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.ஜெகதீசன் கோரிக்கைகளை வலியுறுத்தினார்.
இதில், மின் வாரியத்தில் பணிபுரியும் அனைத்து ஒப்பந்த ஊழியர்களையும் நிரந்தரம் செய்ய வேண்டும். ஊதிய ஒப்பந்தத்தில் அரசு அறிவித்தபடி ரூ.380 தினக் கூலியாக வழங்கிட வேண்டும். கருணைத் தொகை வழங்க வேண்டும்.
உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி வழக்கில் உள்ள ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் செயலாளர் கே.லிங்கவேல் வாழ்த்துரை வழங்கினார். போராட்டத்தில் கலந்து கொண்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தை ஒட்டி காவல் ஆய்வாளர் ஓம்பிரகாஷ் தலைமையில்
போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.