மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில், திருப்பூரில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 16) நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி விடுத்துள்ள அறிக்கை:
மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 16ஆம் தேதி காலை 10.30 மணிக்கு, தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இதில் தனியார் துறையில் வேலையளிப்பவர்கள் கலந்துகொண்டு தேவையானவர்களைத் தேர்வு செய்யவுள்ளனர். எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் முதல், ஐ.டி.ஐ, டிப்ளமோ படித்தவர்கள், ஓட்டுநர்கள், தையல் பயிற்சி பெற்றவர்கள், முதுநிலை பட்டதாரிகள் வரை இதில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
வேலைவாய்ப்பு முகாமுக்கு வரும்போது தங்களது பதிவில் குறைகள் கண்டறியப்பட்டால் அதையும் சரிசெய்து கொள்ளலாம். கூடுதல் கல்வியைப் பதிவு செய்தல், வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை விண்ணப்பம் பெறுதல், பதிவைப் புதுப்பித்தல் ஆகிய பணிகளையும் அன்றைய தினத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செய்து கொள்ளலாம்.