தாராபுரம் நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெடுஞ்சாலைத் துறைக்கு உள்பட்ட பல்வேறு சாலைகள் மிகவும் சேதமாகி உள்ளதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரிதும் அவதியுற்று வருகின்றனர்.
தாராபுரம் நகரில் திண்டுக்கல் சாலையில் துவங்கி பழனி சாலை இணைப்பு முதல் புதிய பேருந்து நிலையம் வழியே கோவை,திருப்பூர், ஈரோடு செல்லும் புறவழிச் சாலை நெடுஞ்சாலை துறையின் பராமரிப்பில் உள்ளது. இந்த சாலைகள் கடந்த சில மாதங்களாக மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது. அதிலும் குறிப்பாக தாராபுரம் புதிய பேருந்து நிலையம் அருகிலும், நஞ்சியம்பாளையம் பாலம் பகுதியிலும், வரப்பாளையம் முதல் சூரியநல்லூர் வரையிலும் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது.
இதனால் விபத்துகள் அதிகரித்து வருகிறது. சேதமடைந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். சாலைகளை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் புதிய சாலைகள் அமைக்கப்படவில்லை. எனினும் மிகவும் சேதமான இடங்களில் விரைவில் சீரமைப்புப் பணி நடைபெறும் என்றனர்.