வெள்ளக்கோவில் அருகே ஏற்கெனவே இயக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென நிறுத்தப்பட்டுவிட்ட அரசு நகரப் பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக நகரப் பேருந்து (எண் கே. 4) வெள்ளக்கோவிலில் இருந்து ஒத்தக்கடை, கள்ளமடை, கெங்கநாய்க்கன்வலசு, இலுப்பைக்கிணறு, குருக்கபாளையம், மூத்தநாய்க்கன்வலசு, வேலப்பநாய்க்கன்வலசு, வண்டாரிபாளையம், முத்தனம்பாளையம், நல்லிக்கவுண்டன்வலசு ஆகிய ஊர்கள் வழியாக கோடந்தூர் வரை இயக்கப்பட்டு வந்தது.
இந்தப் பேருந்து காலை 7.15, மதியம் 1.15, மாலை 4.00 மணிக்கு வெள்ளக்கோவிலில் புறப்படும். இந்நிலையில், இந்த பேருந்து திடீரென நிறுத்தப்பட்டுவிட்டது. இவ்வழியாக இயக்கப்பட்டு வந்த சிற்றுந்தும் தற்போது இயக்கப்படுவதில்லை.
தற்போது, அரசு நகரப் பேருந்து வெள்ளக்கோவில், வேலப்பநாயக்கன்வலசு, சின்னதாராபுரம் வழித் தடத்தில் ஒரே தடவை மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால், மேற்கண்ட கிராம மக்கள் அவதிப்படுகின்றனர். இப்பகுதிகளில் இருந்து பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், நூற்பாலைத் தொழிலாளர்கள், இதர வேலைக்குச் செல்பவர்கள்
பேருந்து வசதி இல்லாததால் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே, எண் கே. 4 அரசு நகரப் பேருந்தை ஏற்கெனவே குறிப்பிட்டுள்ள நேரங்களில் மீண்டும் இயக்க வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.