வெள்ளக்கோவில் அருள்மிகு தெய்வநாயகி உடனமர் சோழீஸ்வர சுவாமி கோயிலில் அம்மையப்பர் திருக்கல்யாண உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அம்மையப்பர் திருக்கல்யாணத்தை முன்னிட்டு கோயிலில் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. காங்கயம் சாலையிலுள்ள ஸ்ரீவீரக்குமார சுவாமி கோயில் விநாயகர் சன்னதியில் இருந்து 12 திருமுறைகள், சீர்த் தட்டு, மலர்த் தட்டுகளுடன் மேளதாளம் முழங்க பெண்கள் சோழீஸ்வர சுவாமி கோயிலுக்கு ஊர்வலமாக சீர்வரிசை கொண்டு வந்தனர்.
அதைத் தொடர்ந்து சோழீஸ்வரர் கோயிலுக்குப் பக்கத்திலுள்ள பெருமாள் கோயிலில் இருந்து பெண் அழைப்புடன் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
அர்ச்சகர்கள் வேள்வி செய்து திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் மு.ரத்தினாம்பாள், சிவனடியார் திருக்கூட்டத்தினர் செய்திருந்தனர்.