ஆனைமலை, நல்லாறு திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக விவசாய சங்கப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி முன்னிலை வகித்தார். கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து பேசியதாவது: விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான ஆனைமலை- நல்லாறு திட்டத்தை விரைவில் தொடங்குவது தொடர்பாக திட்டத்தின் முழு விவரங்கள் குறித்து ஆராய்வதற்காக அனைத்துத் துறைகளின் சார்பில் சிறப்பு நிபுணர் குழு அரசு அனுமதியுடன் விரைவில் அமைக்கப்படவுள்ளது. மேலும், இந்த மாத இறுதிக்குள் விவசாய சங்கப் பிரதிநிதிகள் தமிழக முதல்வரை வரைவு திட்டத்துடன் சந்திக்க ஏற்பாடு செய்யப்படும்.
மேலும், இத்திட்டமானது கேரள அரசுடன் இணைந்து செயல்பட வேண்டியுள்ளதால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கேரள மாநில முதல்வருடன் பேசி விரைவில் சுமார் 4.25 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும் வகையில் ஆனைமலை-நல்லாறு திட்டத்தினை விரைவில் தொடங்கிவைப்பார் என்றார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.பிரசன்ன ராமசாமி, மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) சாதனைக்குறள், அரசு அலுவலர்கள், பரம்பிக்குளம்- ஆழியாறு பாசனத் திட்ட திருமூர்த்தி நீர்த் தேக்க திட்டக் குழு நிர்வாகிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.