உடுமலை நேதாஜி மைதானத்தில் மழைநீர் வடிகால் அமைப்பதற்காக ரூ. 3.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உடுமலை நகரில் உள்ள நேதாஜி மைதானம் விளையாட்டு மைதானமாக விளங்குகிறது. விளையாட்டு வீரர்கள் இந்த மைதானத்தை அன்றாடம் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், இந்த மைதானத்தில் பலரும் நடைப் பயிற்சி மேற்கொள்கின்றனர். ஹாக்கி, கிரிக்கெட், கால்பந்து, கூடைப்பந்து, இறகுப் பந்து, கபடி உள்ளிட்ட குழு விளையாட்டு வீரர்கள், தடகள விளையாட்டு வீரர்கள் இந்த மைதானத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர்.
நேதாஜி மைதானத்துக்குள் மழைக் காலங்களில் தண்ணீர் புகுந்து குளம்போல தேங்கிவிடுகிறது. இதனால், பயிற்சியில் ஈடுபடும் விளையாட்டு வீரர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மைதானத்தில் மழைநீர் தேங்காதவாறு வடிகால் வசதி செய்து தருமாறு நேதாஜி மைதான விளையாட்டு வீரர்கள் நலச் சங்கம் சார்பில் பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் சி.மகேந்திரனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இது குறித்து பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் சி.மகேந்திரன் கூறுகையில், நேதாஜி மைதானத்தில் மழைநீர் வடிகால் அமைக்க ரூ. 3.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவ மழை தொடங்கும் முன்பாக இதற்கான பணிகள் முடிக்கப்படும் என்றார்.