உடுமலையில் பல்வேறு அமைப்புகளின் சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்குப் பேராசிரியர் சி.அயோத்தி தலைமை வகித்தார். பேராசிரியர் வ.கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாணவர் ராஜாமுகமது வர வேற்றார்.
அதைத்தொடர்ந்து, பெரியார் யார்? எனும் தலைப்பில் பேராசிரியர் மு.மதியழகன் சிறப்புரையாற்றினார். பெண்ணியச் சிந்தனைகள் எனும் தலைப்பில் மாணவி மா.தீபா பேசினார். இதையடுத்து, கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
200 மாணவ, மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. மாணவர் தெய்வராஜ் நன்றி கூறினார். தமிழ்த் துறைப் பேராசிரியர்கள், மாணவர்கள் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
ஆதித் தமிழர் கட்சி
ஆதித் தமிழர் கட்சி சார்பில் உடுமலை மத்தியப் பேருந்து நிலையம் அருகில் பெரியாரின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், நிர்வாகிகள் ஈழவேந்தன், கே.பெருமாள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
ஆதித் தமிழர் பேரவை
ஆதித் தமிழர் பேரவை சார்பில் உடுமலையை அடுத்துள்ள பாலப்பம்பட்டியில் பெரியாரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், மாநில வழக்குரைஞர் அணி துணைச் செயலாளர் பெரியார்தாசன், நகரச் செயலாளர் க.வெள்ளிமலை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
வெள்ளக்கோவிலில்...
வெள்ளக்கோவிலில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் திராவிடர் கழக கோவை மண்டல இளைஞரணிச் செயலாளர் ச.மணிகண்டன் தலைமையில் பெரியார் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், கம்யூனிஸ்ட், மக்கள் ஜனநாயகப் பேரவை, திராவிடர் கழகத்தினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பல்லடத்தில்...
பல்லடம், மாதப்பூர் சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், பல்லடம் நகராட்சி முன்னாள் தலைவர் ஆர்.ராமமூர்த்தி, முன்னாள் கவுன்சிலர் குட்டி பழனிசாமி, மயில்சாமி, மகாலட்சுமி நகர் இளங்கோ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
காங்கயத்தில்...
காங்கயம் நகரப் பேருந்து நிலைய வளாகத்தில், புரட்சிகர இளைஞர் முன்னணியின் காங்கயம் பொறுப்பாளர்கள் கவி, கண்ணுசாமி, காங்கயம் தமிழ்ச் சங்கத் தலைவர் மு.தணிகாசலம் உள்ளிட்டோர் பெரியாரின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.