பல்லடம் அருள்புரம் பொதுசுத்திகரிப்பு நிலையத்தில் உலக ஓசோன் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு நிலையத்தின் நிர்வாக இயக்குநர் செல்வகுமார் தலைமை வகித்தார். பொது மேலாளர் கஜேந்திரன் வரவேற்றார். விழாவில் மரக் கன்றுகளை நட்டு வைத்து திருப்பூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் (தெற்கு) சண்முகம் பேசியதாவது:
ஓசோன், வளிமண்டலத்தைச் சுற்றியுள்ள ஒரு படலம். நாம் அனைவரும் இந்த பூமியில் வாழ்வதற்கு முக்கிய காரணம் இந்த ஓசோன் படலம்தான். பூமியில் வாழ்பவர்களுக்கு அதிக சேதாரத்தை ஏற்ப்படுத்தக்கூடிய புறஊதாக் கதிர்களிடமிருந்து நம்மை இது பாதுகாக்கிறது.
நாம் வாழும் இந்த பூமி வெப்பம் அடையாமல் பாதுகாக்கவும் மழை வளத்தை பெருக்கவும் அதிக அளவில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும். பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டை நாம் அனைவரும் அறவே புறக்கணிக்க வேண்டும் என்றார்.
விழாவில் திருப்பூர் சாய ஆலைகள் சங்கத்தின் தலைவர் நாகராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.