திருப்பூரில் டாஸ்மாக் ஊழியரை வழிமறித்து ரூ.2.84 லட்சம் பறித்துச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருப்பூர் வெள்ளியங்காடு கே.எம்.ஜி.நகரைச் சேர்ந்தவர் ராஜா(36). இவர் கல்லாங்காடு பகுதியில் டாஸ்மாக் மதுபானக் கடையில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார்.
டாஸ்மாக் கடையில் வசூலான ரூ. 2லட்சத்து 84 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு வங்கியில் செலுத்துவதற்காக புதன்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது வெள்ளியங்காடு வளைவு பகுதியில் வழிமறித்த இரு மர்மநபர்கள், அவர் வைத்திருந்த பணப் பையை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பினர்.
இதுகுறித்து ராஜா அளித்த புகாரின் பேரில் திருப்பூர் தெற்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.