திருப்பூர் கல்லூரி சாலையில் அமைந்துள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் நிகழாண்டுக்கான தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி புதன்கிழமை தொடக்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனைக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்பட்ட புதிய வடிவமைப்புடன் கூடிய பட்டு, பருத்தி சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டி, லுங்கி, துண்டு ரகங்கள், ஆடவர் அணியும் ஆயத்த சட்டைகள், மகளிர் விரும்பும் சுடிதார் ரகங்கள், ஆர்கானிக் பருத்தி சேலைகள் மற்றும் ஏற்றுமதி தரம் வாய்ந்த ஷோம் பர்னிசிங் ரகங்கள் உள்பட ஏராளமாக ரகங்கள் வரவழைக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் சுரேஷ்குமார், திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் ஜெயக்குமார், முதுநிலை மேலாளர் ரஞ்சனி, மேலாளர் (தணிக்கை) அம்சவேணி, துணை மண்டல மேலாளர் மோகன்குமார், திருப்பூர் விற்பனை நிலைய மேலாளர் தனபாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.