தடுப்பணைகளைக் கட்டி தண்ணீரைச் சேமிக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேசினார்.
திருப்பூர் புறநகர் மாவட்டத்தில் டிடிவி தினகரன் 22ஆம் தேதி வரை மூன்று நாள்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். இந்நிலையில் முதல் நாளான வியாழக்கிழமை மாலை உடுமலை மத்திய பேருந்து நிலையத்தில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் புறநகர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.சண்முகவேலு கூட்டத்துக்குத் தலைமை வகித்தார். இதில் டிடிவி தினகரன் பேசியதாவது:
தமிழக அரசு, மத்திய அரசுக்கு அடிபணிந்து செல்கிறது. இந்த ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டது. விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் தாங்க முடியாத பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். விவசாயத்தைக் காப்பாற்ற இந்த அரசு எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை.
அண்மையில் கர்நாடகம் கொடுத்த 500 டிஎம்சி தண்ணீரை முறையாக சேமிக்காமல் விட்டதால் அனைத்தும் கடலுக்குச் சென்று வீணாகி விட்டது. தடுப்பணைகளைக் கட்டி தண்ணீரைச் சேமிக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கொங்கு மண்டலத்தில் விவசாயிகள் வாழ்வு மலர ஆனைமலை ஆறு - நல்லாறு திட்டத்தை உடனடியாக நிறைவேற்றுவோம். தமிழகத்தில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்த தொழில் நுட்ப கல்லூரிகளைத் தொடங்குவோம் என்றார்.
கொங்கு மண்டலப் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி, திருப்பூர் புறநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் வழக்குரைஞர் வி.சிவகுமார், மட த்துக்குளம் ஒன்றியச் செயலாளர் எஸ்.ராஜ்குமார் உள்ளிட்ட நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து மடத்துக்குளம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட குமரலிங்கம், குறிச்சிக்கோட்டை, எரிசனம்பட்டி, உடுமலை சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கோலார்பட்டி, திப்பம்பட்டி, பெதப்பம்பட்டி ஆகிய கிராமங் களில் டிடிவி தினகரன் பேசினார்.
முன்னதாக புதன்கிழமை இரவு உடுமலை வந்த டிடிவி தினகரனுக்கு பழைய பேருந்து நிலையம் அருகே சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.