வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி பேசியதாவது:
வடகிழக்கு பருவ மழையின்போது ஏற்படும் அனைத்து இடர்பாடுகளையும் எதிர்கொள்ளும் விதமாக மாவட்டத்தின் வருவாய் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்களது அலுவலகங்களில் உள்ள புகார் தொலைபேசி, வாகனங்கள், வயர்லெஸ் கருவிகள் அனைத்தும் இயங்கும் நிலையில் உள்ளதா என்பதை உறுதிபடுத்துதல் வேண்டும்.
கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் தங்களது எல்கைக்கு உள்பட்ட கிராமத்தில் தங்கி இருந்து வெள்ள சேதம் குறித்த அறிக்கையை வட்டாட்சியர்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும். பொதுப் பணித் துறை ( நீர்வள ஆதார அமைப்பு), தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள நீர் மட்ட அளவை தினமும் காலை மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்துக்குத் தெரியபடுத்த வேண்டும்.
நெடுஞ்சாலைத் துறை, வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை, மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத் துறை, பொதுப் பணித் துறை , மாநகராட்சி, நகராட்சி, ஊரக வளர்ச்சி மற்றும் பேரூராட்சித் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், வனத் துறை, உணவுப் பொருள்கள் மற்றும் நுகர்வோர்
பாதுகாப்புத் துறை, காவல் துறை, கல்வித் துறை, தீயணைப்புத் துறை, போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உள்பட அனைத்துத் துறையினரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை வடகிழக்கு பருவமழையின் போது துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்றார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்னா ராமசாமி, மாநகர காவல் துணை ஆணையர் உமா, தாராபுரம் சார் ஆட்சியர் கிரேஸ் பச்சாவு, ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் ரமேஷ்குமார் உள்பட அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.