அவிநாசி பேரூராட்சியில் குடிநீர்க் கட்டணம், சொத்து வரி உயர்த்துவது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அகில பாரத மூத்த குடிமக்கள், பென்சனர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அதன் மாநிலத் தலைவர் அ.சாமிநாதன் கூறியதாவது:
அவிநாசி பேரூராட்சி எல்லைக்குள் இருக்கும் சொந்தக் குடியிருப்புகள், வாடகைக் குடியிருப்புகளுக்குச் சொத்து வரி 50%, வணிகக் கட்டடம், தொழிற்சாலைக் கட்டடங்களுக்கு சொத்து வரி 100%, குடியிருப்புகளுக்கான குடிநீர்க் கட்டணம் சுமார் 3 மடங்காக ரூ. 150 ஆக உயர்த்தி அமல்படுத்த உள்ளதாகத் தெரிகிறது. குடிநீர் விநியோகம் சீராகும் வரைக் கட்டண உயர்வை தற்போதைக்கு கைவிட வேண்டும். சொத்து வரியை அனைத்துக் கட்டடங்களுக்கும் பொதுவாக ஒரே அளவில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை 10% அளவுக்கு உயர்த்தலாம். இதை பேரூராட்சி நிர்வாகம் பரிசீலித்து அமல்படுத்த வேண்டும் என்றார்.