திருப்பூரில் பயணிகள் ரயில் தொடர்ந்து தாமதமாக வருவதாகக் கூறி ரயிலை மறித்து பயணிகள் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்திய நிலையில், சென்னை செல்ல வந்த அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனிடம் மனுவும் அளித்தனர்.
திருப்பூரிலிருந்து ஏராளமான தொழிலாளர்கள் தினந்தோறும் ரயில் மூலம் கோவை செல்வது
வழக்கம் . நாகர்கோவிலிருந்து திருப்பூர் வழியாக கோவை செல்லும் ரயில் தினந்தோறும் 7.20 க்கு
வருவது வழக்கம். ஆனால் அந்த ரயில் கடந்த சில நாள்களாக சரியான நேரத்துக்கு வருவதில்லை என பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில் அந்த ரயில் செவ்வாய்க்கிழமையும் இரவு 9 மணி கடந்தும் வராததால் பயணிகள் அவ்வழியே வந்த பெங்களூருவிலிருந்து கோவை செல்லும் உதய் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய ரயில்வே போலீஸார் மற்றும் அதிகாரிகள் நாளை முதல் பயணிகள் ரயில் சரியான நேரத்துக்கு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்ததையடுத்து பயணிகள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதோடு திருப்பூர் வழியாக செல்லும் ரயில்கள் ஒரு மணி நேரம் தாமதமாக சென்றன. இதனிடையே சென்னை செல்வதற்காக ரயில் நிலையம் வந்த கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனிடம் இதுகுறித்து பயணிகள் மனு அளித்தனர். அமைச்சரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.