வெள்ளக்கோவில் அருகே கிணற்றில் செத்து மிதந்த மீன்களை எடுக்க முயன்ற விவசாயி மேலே வரமுடியாமல் சிக்கித் தவித்தார்.
வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியம், வள்ளியிரச்சல் பொன்முடியான் தோட்டத்தைச் சேர்ந்தவர் வி.சாந்தகுமார் (52), விவசாயி. இவருடைய தோட்டத்தில் 20 அடி நீள, அகலம், 60 அடி ஆழமுள்ள ஒரு கிணறு உள்ளது. இதில் 40 அடியில் தண்ணீர் உள்ளது.
இந்தக் கிணற்றில் ஏராளமான கெண்டை, கெழுத்தி, அயிரை மீன்கள் உள்ளன.
இவற்றில் நூற்றுக்கணக்கான மீன்கள் திடீரென இறந்து மிதந்ததால் கிணற்றுத் தண்ணீரில் துர்நாற்றம் வீசியது. இதனால் இந்த நீரைப் பயன்படுத்த முடியவில்லை.
செத்து மிதந்த மீன்களை அப்புறப்படுத்த படிகள் இல்லாத அந்தக் கிணற்றுக்குள் கயிறு கட்டி சாந்தகுமார் வியாழக்கிழமை இறங்கியுள்ளார். பாதி வேலை நடந்து கொண்டிருந்த போது மயக்கம் வருவது போல் இருந்துள்ளது. அவரால் கிணற்றிலிருந்து மேலே வர முடியவில்லை. கிணற்றுச் சுவரைப் பிடித்துக் கொண்டு பரிதவித்துள்ளார்.
மேலே இருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் சி.தனசேகரன் தலைமையிலான தீயணைப்புப் படையினர், சாந்தகுமாரை கயிறு மூலம் உயிருடன் மீட்டனர்.