வெள்ளக்கோவில் நகராட்சிக்குள்பட்ட பகுதியில் 10 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தி மற்றும் பயன்பாட்டுக்குத் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில், வெள்ளக்கோவில் நகராட்சிக்குள்பட்ட கோவை - திருச்சி சாலையிலுள்ள மளிகைக் கடைகள், இறைச்சிக் கடைகள், உணவகங்கள், தேநீர்க் கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தப்படுகிறதா என திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் வீரக்குமார் திரையரங்கம் அருகிலுள்ள ஒரு பேக்கரியில் தடை செய்யப்பட்ட 10 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டு ரூ.1,500 அபராதம் விதிக்கப்பட்டது.
நகராட்சி சுகாதார ஆய்வாளர் சரவணன், உணவுப் பாதுகாப்பு அலுவலர் ராமச்சந்திரன், சுகாதார மேற்பார்வையாளர் பழனிசாமி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதுபோன்ற சோதனைகள் அடிக்கடி நடத்தப்படும். ஒரு முறை பறிமுதல் செய்யப்பட்டு, மறுமுறை மீண்டும் தவறு கண்டறியப்பட்டால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் அ.சங்கர் தெரிவித்தார்.