திருப்பூர் மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற உலகத் திறனாய்வாளர்களுக்கான போட்டியில் காங்கயம் ஸ்ரீராஜராஜேஸ்வரி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட அளவிலான உலகத் திறனாய்வாளர்களுக்கான போட்டிகள் திருப்பூரில் உள்ள சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது. இதில், காங்கயம் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி டி.மோனிகா உயரம் தாண்டுதலில் இரண்டாம் இடமும், மாணவன் ஆர்.அஜய் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் மூன்றாமிடமும் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.
இதில், மாணவி டி.மோனிகா மண்டல அளவிலான உலகத் திறனாய்வுப் போட்டியில் பங்கு பெறத் தகுதி பெற்றுள்ளார்.
இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் கே.மணிவேல், டி.சதீஷ் ஆகியோருக்கு பள்ளித் தாளாளர் கே.வைத்தீஸ்வரன், பள்ளி முதல்வர் மு.ப.பழனிவேலு ஆகியோர் பாராட்டினர்.