பல்லடத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கான புதிய கட்டடம் கட்ட பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பல்லடம் - மங்கலம் சாலையில் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றம் வாடகைக் கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது.
இதில் சொந்தக் கட்டடம் கட்ட தமிழக அரசு சார்பில் ரூ.5.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. பல்லடம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் இயங்கி வரும் வளாகத்தில் தரைதளம், முதல் தளம் மற்றும் இரண்டாம் தளம் என ஒருங்கிணைந்த நீதி மன்றத்திற்கு புதிய கட்டடம் கட்டப்படவுள்ளது.
தரைத்தளத்தில் நீதிமன்றமும், முதல் மற்றும் இரண்டாம் தளத்தில் அலுவலகம், நீதிபதிகள் மற்றும் வழக்குரைஞர்கள் ஒய்வு அறை, நூலகம், கழிப்பறை உள்ளிட்டவை அமைக்கப்படவுள்ளது.
பல்லடம் சட்டப்பேரவை உறுப்பினர் கரைப்புதூர் ஏ.நடராஜன் முன்னிலையில் பூமி பூஜை நடத்தப்பட்டு கட்டடப் பணிகளை திருப்பூர் மாவட்ட நீதிபதி எஸ்.அல்லி துவக்கி வைத்தார்.
இதில் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிபதி எஸ்.ஜெகநாதன், பல்லடம் நீதிபதிகள் ராஜமகேஷ், மீனாசந்திரா, இந்துலதா, பல்லடம் வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் ஏ.சிவசுப்பிரமணியம், செயலாளர் பி.ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.