பல்லடம் அருகே கள்ளிமேட்டில் அரசு நிலத்தில் பாறையை சிலர் வெடிவைத்துத் தகர்த்துள்ளனர்.
பல்லடம் வட்டம், கணபதிபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட கள்ளிமேட்டில் அரசு புறம்போக்கு நிலத்துக்குப் பின்புறம் தனி நபர்கள் நிலத்தை வீட்டுமனையாகப் பிரித்து விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளனர். இந்த இடத்துக்கு முன்புறமாக அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள பாறை இடையூறாக இருப்பதாகக் கருதி அதை வெடிவைத்து சனிக்கிழமை தகர்த்துள்ளனர்.
இது பற்றி அப்பகுதி மக்கள் கிராம நிர்வாக அலுவலர் சுந்தரபாண்டியனுக்கு தகவல் கொடுத்தனர். அவர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினார். அப்போது, அனுமதி இன்றி பாறை வெடிவைத்துத் தகர்க்கப்பட்டதை உறுதி செய்து, மேல் நடவடிக்கை எடுக்குமாறு பல்லடம் வட்ட நிர்வாகத்துக்கு அறிக்கை அனுப்பிவைத்துள்ளார்.