திருப்பூரில் முறைகேடாக இயங்கி வந்த இரு சாய ஆலைகளின் மின் இணைப்பை மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை துண்டித்தனர்.
திருப்பூரில் பிரிண்டிங், டையிங் (சாய ஆலைகள்) தொழிற்சாலைகள் அதிக அளவில் உள்ளன. இந்தத் தொழிற்சாலைகள் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியுடன் செயல்பட்டு வருகின்றன. இதில் ஒரு சில நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலைகளில் இருந்து சுத்திகரிக்காமல் சாயக் கழிவுகளை அருகில் உள்ள ஓடை, நொய்யல், சாக்கடைகளில் கலந்துவிடுவதாக அடிக்கடி புகார் எழுந்துவருகிறது.
இது குறித்து விசாரணை நடத்தும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் மின் இணைப்பைத் துண்டிப்பது வழக்கம்.
இந்த நிலையில், இடுவம்பாளையம் பகுதியில் இயங்கி வரும் இரு சாய ஆலைகள் சாயமேற்றுவதற்குப் பயன்படுத்தப்பட்ட நீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றியதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்குத் தகவல் கிடைத்தது.
இதன்படி, அதிகாரிகள் விசாரணை நடத்தி இரு ஆலைகளின் மின் இணைப்பையும் துண்டித்தனர். மேலும், முறைகேடாக சாயக் கழிவுகளை வெளியேற்றினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்தனர்.