திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் விடுமுறை நாளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 41 பேரை காவல் துறையினர் புதன்கிழமை கைது செய்தனர். இவர்களிடமிருந்து 1, 087 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
திருவள்ளுவர் தினத்தை ஒட்டி, திருப்பூர் மாவட்டத்தில் மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இயங்கும் பார்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், திருப்பூர் மாவட்ட காவல் எல்லைக்கு உள்பட்ட உடுமலை, தாராபுரம், காங்கயம், அவிநாசி ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக 22 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 798 மது பாட்டில்கள்களை பறிமுதல் செய்தனர்.
அதேபோல், திருப்பூர் மாநகரில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 19 பேரை மாநகர காவல் துறையினர் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 289 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். திருப்பூர் மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் சட்ட விரோதமாக மது விற்பனை தொடர்பாக 41 பேர் கைது செய்யப்பட்டு, மொத்தமாக 1087 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.