கடும் பனிப் பொழிவால் வரத்து குறைந்து பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்துக்கு நிலக்கோட்டை, திண்டுக்கல், சத்தியமங்கலம் பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. பொங்கல் பண்டிகையால் பூக்கள் விலை உயர்ந்திருந்தது. பண்டிகை முடிந்து
இரண்டு நாள்கள் ஆகியும் பூக்கள் விலை குறையவில்லை. தற்போது கடும் பனிப் பொழிவால் சந்தைக்கு பூக்கள் வரத்து குறைந்திருப்பதால் பூக்கள் விலை மேலும் உயர்ந்துள்ளது.
பண்டிகை காலத்தில் செவ்வந்தி ஒரு கிலோ ரூ.150க்கு விற்றது தற்போது ரூ.200 ஆகவும், அரளி ரூ.120லிருந்து ரூ.200க்கும், சம்பங்கி ரூ.60லிருந்து ரூ. 160க்கும், மல்லிகை ரூ.900லிருந்து ரூ.1200க்கும், முல்லை ரூ.800லிருந்து ரூ.1000க்கும், பட்டுப்பூ ரூ.75லிருந்து ரூ.100க்கும், ஜாதிமல்லி ரூ.600லிருந்து ரூ.750க்கும், கனகாம்பரம் ரூ.350லிருந்து ரூ.600க்கும் விற்பனையானது.
இதுகுறித்து பூ வியாபாரி மணி கூறியதாவது:
தமிழகத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் பூக்கள் செடியிலேயே கருகி வருகின்றன. இதனால் சந்தைக்கு பூக்கள் வரத்து குறைந்துள்ளது. அதனால் விலை உயர்ந்துள்ளது. திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள், கோயில் விழாக்கள் துவங்கியுள்ள நிலையில் பூக்கள் வரத்து அதிகரித்தால் மட்டுமே பூக்களின் விலை குறையும். இதே நிலை நீடித்தால் பூக்களின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது என்றார்.