திருப்பூரில் ரயில் மோதி 2 பேர் சாவு
திருப்பூரில் இரு வேறு இடங்களில் ரயில் மோதி இருவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.
திருப்பூர், சூசையாபுரம் பகுதியை சேர்ந்தவர் டேவிட் சாலமன் (73). இவர், திருப்பூர் ரயில்நிலையம் அருகில் ஞாயிற்றுக்கிழமை தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக ரயில்மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற ரயில்வே காவல் துறையினர் டேவிட் சாலமனின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
திருப்பூர், ஊத்துக்குளி சாலை இரண்டாவது கேட் அருகில் ரயிலில் அடிப்பட்டு இளைஞர் ஒருவர் சடலமாகக் கிடப்பதை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கொடுத்த தகவலின்படி சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே காவல் துறையினர் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
விசாரணையில், இறந்து கிடந்தவருக்கு 30 வயது இருக்கலாம் என்பது தெரியவந்தது. எனினும் அவரது பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை காவல் துறையினர் சேகரித்து வருகின்றனர்.