திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் உள்ள மாவட்ட க் கல்வி அலுவலர் அலுவலகப் பூட்டை உடைத்து முக்கிய ஆவணங்களை மர்ம நபர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு திருடிச் சென்றனர்.
தாராபுரத்தில் ஐந்து சாலை சந்திப்பு அருகே அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்தக் கட்டடத்தின் மேல் தளத்தில் மாவட்டக் கல்வி அலுவலரின் அலுவலகமும் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், மாவட்டக் கல்வி அலுவலகத்தின் பூட்டை மர்ம நபர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அங்குள்ள 4 பீரோக்களையும், பள்ளித் தலைமை ஆசிரியர் அறையில் உள்ள 2 பீரோக்களையும் உடைத்த மர்ம நபர்கள் சில முக்கிய ஆவணங்கள், மடிக்கணினி உள்ளிட்ட பொருள்களையும் திருடிச் சென்றனர்.
இது குறித்து தாராபுரம் காவல் நிலையத்தில் பள்ளித் தலைமை ஆசிரியர் அன்னம்மாள், பள்ளிக் காவலர் நாகம்மாள் ஆகியோர் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகாரின்பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.