தாராபுரம் அருகே குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கழுத்தை அறுத்துக் கொலை செய்த கணவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த மரவபாளையத்தில் வசித்து வருபவர் செந்தில்குமார் (40). இவரது மனைவி துளசிமணி (35). இந்தத் தம்பதிக்கு 16 வயதில் மகளும், 14 வயதில் மகனும் உள்ளனர். செந்தில்குமார் கூலி வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், செந்தில்குமார் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டுள்ளார். இதனால், கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாம். அவர்களுக்கு இடையே ஞாயிற்றுக்கிழமை இரவு மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த செந்தில்குமார் கத்தியால் மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பி விட்டார்.
இது குறித்து அப்பகுதியினர் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற குண்டடம் காவல் துறையினர் துளசிமணி சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். போலீஸார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து செந்தில்குமாரை தேடி வருகின்றனர்.