மேட்டுப்பாளையம்-மதுரை பயணிகள் ரயில் இயக்கவதற்கு தென்னக ரயில்வே கொள்கை அளவில் முடிவு செய்திருப்பதற்கு உடுமலை ரயில் பயணிகள் நலச் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: மேட்டுப்பாளையம்-சென்னை, சென்னை-மேட்டுப்பாளையம் வழித் தடத்தில் நீலகிரி விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு அதிகாலையில் வரும் இந்த ரயில் பகல் நேரத்தில் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்படுகிறது. எனவே, மேட்டுப்பாளையம் முதல் மதுரை வரை பகல் நேர பயணிகள் ரயிலாக இதை மாற்ற கொள்கை அளவில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றனர்.
இது குறித்து உடுமலை ரயில் பயணிகள் நலச் சங்கத் தலைவர் ஆடிட்டர் ஆர்.கந்தசாமி கூறியது: கோவை-பொள்ளாச்சி-உடுமலை-பழனி-திண்டுக்கல்-மதுரை வழித் தடத்தில் பயணிகள் ரயிலை இயக்க வேண்டும் என நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வந்தோம். தற்போது மேட்டுப்பாளையம்-மதுரை பயணிகள் ரயிலை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது வரவேற்கத்தக்கது என்றார்.