பல்லடத்தில் எலக்ட்ரீஷியன் தொழில் பழகுநர் பயிற்சிக்கான நேர்காணல் நடைபெறவுள்ளதாக மின்சார வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து மின் உற்பத்தி, பகிர்மானக் கழகத்தின் பல்லடம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் கி.தமிழ்ச்சேகரன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:
திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஐ.டி.ஐ. ஒயர்மேன், எலக்ட்ரீஷியன் படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதாந்திர உதவித் தொகையாக ரூ.7,709 வழங்கி ஒரு வருட தொழில் பழகுநர் பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கான நேர்காணல் பல்லடத்தில், திருச்சி சாலையில் உள்ள ராம்ராஜ் காட்டன் ஷோரூம் மேல் மாடியில் உள்ள பல்லடம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகத்தில் வரும் 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. நேர்காணல் காலை 9.30 மணிக்குத் தொடங்கும். இதில், தகுதியுடைய அனைவரும் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.