ஏற்காடு: சேலம் மாவட்டம், ஏற்காட்டில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாகக்காணப்பட்டது.
பள்ளிகள் விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமையையொட்டி ஏற்காட்டுக்கு சுற்றுலாப் பேருந்துகள், வேன்கள், கார்கள், இருசக்கர வாகனங்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்தனர். ஏற்காட்டில் படகு இல்லம், மான்பூங்கா, அண்ணாபூங்கா, ரோஜா தோட்டம், பக்கோட காட்சி முனை, சேர்வராயன் கோயில் , கிளியூர் நீர் அருவி பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் காணமுடிந்தது.
படகு இல்லத்தில் சுற்றுலாப் பயணிகள் படகுசவாரி சென்று மகிழ்ந்தனர். மலைப் பாதைகளிலும் சுற்றுலா வாகனங்கள் அதிகமாகக் காணப்பட்டன. மேலும் ஞாயிற்றுக்கிழமை சாரல் மழை பெய்ததால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். சுற்றுலாப் பகுதி சாலையோர பழக்கடைகளில் மலை வாழை, மிளகு, வெண்ணெய்ப் பழம் மற்றும் ஏற்காட்டில் விளையும் பொருள்களை சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.