கோடை உழவு செய்ய விவசாயிகளுக்கு ஆலோசனை

தருமபுரி மாவட்டத்தில் கோடை மழையைப் பயன்படுத்தி விவசாயிகள் கோடை உழவு செய்ய வேளாண்மை இணை இயக்குநர் (பொ) சுசீலா விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
கோடை உழவு செய்ய விவசாயிகளுக்கு ஆலோசனை

தருமபுரி மாவட்டத்தில் கோடை மழையைப் பயன்படுத்தி விவசாயிகள் கோடை உழவு செய்ய வேளாண்மை இணை இயக்குநர் (பொ) சுசீலா விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
 சித்திரை மாதத்துப் புழுதி, பத்தரை மாற்றுத் தங்கம் என நமது முன்னோர்கள் கூறுவர். அதிக வெப்பத்தால் மண்ணுக்கு அடியிலுள்ள ஈரம் ஆவியாகி வெளியேறிவிடும்.

இந்த நிலையில் மேல் மண்ணை உழவு செய்து புழுதிப் படலம் அமைத்து விட்டால் வானுக்கும் வேர் சூழ் மண்டலத்துக்கும் உள்ள தொடர்பு அறுந்துவிடும். அதாவது மேல் மண் ஒரு போர்வையாகச் செயல்பட்டு நிலத்துக்கு அடியில் உள்ள ஈரம் ஆவியாகி விடாமல் தடுத்து நிறுத்தப்படும்.

மேலும், கோடை உழவினால் மண் துகள்களாக்கப்படும் போது வெப்பம் விரைவில் உறிஞ்சப்பட்டு விரைவில் குளிர்ந்து விடும். நிலத்தில் நீர் இறங்கும் திறன் அதிகரிக்கும். இதனால் மண்ணில் நல்ல காற்றோட்டம் உண்டாகி நுண்ணுயிர்களின் செயல்பாடு அதிகரிப்பதால் மண் வளம் பெருகும்.

கோடை உழவினால் வயலிலுள்ள களைகள் கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால் பயிர் சாகுபடி செய்யும் போது களைகளைக் கட்டுப்படுத்த ஆகும் செலவும் குறைய வாய்ப்புள்ளது. அடி மண்ணிலுள்ள தீமை செய்யும் பூச்சிகளின் கூண்டுப் புழுக்கள் கோடை உழவு செய்வதால் வெளிக் கொண்டு வரப்பட்டு அழிக்கப்படுகிறது.

கோடை உழவு செய்யும் போது மிகவும் முக்கியமாக கவனிக்க வேண்டியது சரிவுக்குக் குறுக்கே உழவு செய்வதாகும். இவ்வாறு செய்வதால் நீர் வழிந்தோடி மண் அரிப்பு ஏற்படுவது தவிர்க்கப்படுவதோடு மழை நீரும் சேகரிக்கப்படும்.

இந்தக் கோடையில் பெறப்படும் மழையைப் பயன்படுத்தி விவசாயிகள் தாமதமின்றி செயல்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com