தருமபுரி அருகே தனியார் பள்ளி வாகனத்தில் சிக்கி இரண்டரை வயது குழந்தை உயிரிழந்தது.
தருமபுரி அடுத்த புலிகரையை சேர்ந்தவர் மணிவண்ணன். இவரது மனைவி நந்தினி. இந்த தம்பதிக்கு முதல் மகன் மெல்வின் மற்றும் இரண்டரை வயது குழந்தை பாலமித்ரன். இதில், ஐந்து வயது மகன் மெல்வின், தருமபுரி ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார். இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை, பள்ளியிலிருந்து வேன் மூலம் வரும் மகனை வீட்டுக்கு அழைத்துச் செல்ல நந்தினி தனது இரண்டரை வயது மகன் பாலமித்ரனுடன் வந்துள்ளார். அப்போது, பள்ளி வேனில் இருந்து மகனை இறக்கிய போது, குழந்தை பாலமித்ரன், எதிர்பாராத வகையில் வேனின் வலதுபுற சக்கரத்துக்கு அடியில் சென்றுள்ளார்.
இதையறியாமல், வேன் ஓட்டுநர் வாகனத்தை இயக்கியுள்ளார். அப்போது, பாலமித்ரன் டயரில் சிக்கி பலத்த காயமடைந்தார். இதை கண்ட, நந்தினி மற்றும் அப் பகுதியில் இருந்தவர்கள் பாலமித்ரனை மீட்டு, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், அக் குழந்தை இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இது குறித்து, புகாரின் பேரில், மதிகோண்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி
வருகின்றனர்.