தான் கட்சி மாறப் போவதாக வதந்தி பரப்பப்படுகிறது. இதனை யாரும் நம்ப வேண்டாம் என முன்ளாள் அமைச்சர் பி.பழனியப்பன் தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் செவ்வாய்க்கிழமை தருமபுரியில் செய்தியாளர்களிடம் கூறியது: எம்ஜிஆர் காலத்திலிருந்து அதிமுகவில் தொடர்ந்து பணியாற்றுகிறேன். அவரது, மறைவுக்குப் பிறகு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையை ஏற்றுச் செயல்பட்டேன். தற்போது, ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு சசிகலா, டி.டி.வி.தினகரன் தலைமையில் தொடர்ந்து செயலாற்றி வருகிறேன்.
அதிமுகவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, கட்சியின் தலைமை நிலையச் செயலர் உள்ளிட்ட பொறுப்புகளை வழங்கினார். அதேபோல, தற்போது, அ.ம.மு.க.வில் தலைமை நிலையச் செயலராக நியமிக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறேன். நல்ல தலைமையின் கீழ் சிறப்பாகப் பணியாற்றி வருகிறேன். எனது செயலை முடக்க பல்வேறு நெருக்கடிகளை அதிமுக அரசு வழங்கியது. இவற்றையெல்லாம் மீறி, தொடர்ந்து தீவிரமாக கட்சிப் பணியாற்றி வருகிறேன். இதனை சீர்குலைக்கவும், குழப்பத்தை ஏற்படுத்தவும் கட்சி மாறுவதாக ஆளும் கட்சியினர் வதந்தி பரப்புகின்றனர். நான் சரியான முடிவெடுத்து, நல்ல பாதையில் சென்று கொண்டிருக்கிறேன். ஆகவே, இது தவறான தகவல். இதனை யாரும் நம்ப வேண்டாம். அ.ம.மு.க.வுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. தமிழகத்தில் இடைத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படப்படவில்லை. ஆளும் கட்சியினரால், இந்தத் தேர்தல்களை நடத்த இயலாது. எப்போது, தேர்தல் வந்தாலும், அ.ம.மு.க. வெற்றிப்பெற்று, ஆட்சி அமைக்கும் என்றார்.
மாவட்டச் செயலர் டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.